Monday, March 29, 2010

உன் பார்வையில் ஒரு விடியல்

உன் பார்வையில் ஒரு விடியல்


கருவானின் செரிந்தடர்ந்த

விண்மீன்களான

என் எண்ணங்கள்

உன் முக சூரியன் கண்டதும்

வெளிர்ந்தன....



வாழ்வின் சூட்சுமம் !!

என் வாழ்வின்

நிமிடங்கள் அனைத்தும்

நியாயமாக்கப்பட்டவை.

அது இல்லாத தருணங்களில்

நான் இறந்திருக்கக் கூடும். ...





அன்பைத் தேடி ...

அன்பே சாஸ்வதமென்று

புரிந்தும், அறிந்தும்

தேடுகிற வாழ்க்கையில் ....

என் தேடல் உயர்ந்தது....

உனக்காக செலவிட

எனக்கு நேரமில்லை !!



வித்தை

நீ என் வாழ்வு

நீ என் பயணம்

நீயே என் உயிர் ....

என் விருப்பம் புரிந்து நடந்து கொள் ....

பிளாட்பாரம் முதல் பாரக் ஒபாமா வரை

கவலையற்ற பிளாட்பார  தூக்கம் :
அதிர்ஷ்டமில்லா முட்டாளோ, சோம்பேறியோ?
அறிவால், உழைப்பால் வந்த
வீடும் பணமும் எனக்கு !

என்ன அழகு ! உலக அழகி !:
அங்கில்லாத ஆன்ம சந்தோஷம்
என்னிடத்தில் எப்போதும் உண்டே !!

சச்சின் ஒரு சகாப்தம் :
என்ன இருந்தாலும் உயரத்தில்
குறைச்சல்தான் என்னைவிடவும்  !!!

நோபெல் பரிசு , வென்றார் விஞ்ஞானி :
என்ன ஆராய்ந்தாலும் கடைசியில் மண்ணுக்கு
வாழ்வை அனுபவிக்கனும்
எப்போதும் என்னைப்போல் !!!!

ஆதர்ஷ தம்பதி :
எல்லாம் நடிப்பு ,
உள்ளே இருப்பது வெளியில் தெரியுமா ?
எப்ப வேணாலும் புட்டுக்கும் !!!!!

"அகம் பிரம்மாஸ்மி "- தன்னை  உணர்ந்தவர்:
யாரோ சொன்னதை திருப்பிச் சொல்லும்
நாடக கிளிகள் !!!!!!

பில்கேட்ஸ்,  அம்பானி :
அதிர்ஷடத்தால் உயரம் போனார் ,
எனக்கு  கிடைத்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி  !!!!!!!

பாரக் ஒபாமா  :
டீக்கடையில் டீ குடிச்சு,  நெனச்ச இடம் தூங்க
அவரால முடியுமா ???????

எப்படி பார்த்தாலும்
ஒரு "மாற்று  " அதிகம்தான்
 நான் !!


(எதிலும் தான் என்கிற நான்)



மீண்டும் ஒரு தலைமுறை ....

பூட்டன் ஒன்று
முப்பாட்டன் பத்து
தாத்தன் நூறு
அப்பன் ஆயிரம்
மகன் பத்தாயிரம்
அவன் மகன் நூறாயிரம்
இன்னும் இன்னும் ஆயிரங்கள் ...

கருவில் பிறந்து
கண்ணைத் திறந்து....
அடித்துப் பிடித்து
ஆறடி வளர்ந்து...
முட்டி மோதி
மெத்தப்  படித்து...
உருகி உடைந்து
காதல் புணர்ந்து ...
துரத்தி வருத்தி
செல்வம் குவித்து ..
வானம் பார்த்து
கேள்விகள் கேட்டு ...
உழைத்து சலித்து
புகழைத் தேடி ...
ஆயிரம் அர்த்தம்
கண்டு தொலைத்து .....
களைத்து தேய்ந்து
மண்ணில் கரைய ....

மீண்டும் ஒரு தலைமுறை ....

Saturday, March 27, 2010

பிறந்துவிட்டது

அலையலையாய் எழுத்துக்கள் 
கண்வழியே அசைந்தாடும்
இல்லாத கவிதைகள் 
மனசுக்குள் கூத்தாடும் 

புரியாத ராகங்கள் 
உதடுகள் முணுமுணுக்கும்
விரல்கள் கீபோர்டில் 
நில்லாது தாளமிடும் 

காதோர குரலொன்று 
விடாது ஆர்ப்பரிக்கும் 
படைத்தலின் தாகம் 
சந்தோஷ கூச்சலிடும் 

ம்ம்  ...பிறந்துவிட்டது கவிதை .

-- 

ஒன்றுபோல ... ஆனால் விசித்திரமான ...



எழுதுகிறோம் 
எழுதத்  தயங்குகிறோம் 
படிக்கிறோம் 
பொறுக்கிப்  படிக்கிறோம் 
தேடுகிறோம் 
அவ்வப்போது விடுகிறோம் 
கட்டுகிறோம் 
மீண்டும் தளர்த்துகிறோம் 

உன்னுள்ளும் ஆசை 
என்னுள்ளும் ஆசை 
உனக்கு என் மனம்  தொட 
எனக்கு உன் மனம் தொட 

எனக்கும் உண்மை பிடிக்கிறது 
சோம்பல் கொண்ட பொய்யும் பிடிக்கிறது 
எல்லாவற்றுக்கும் கேள்வியும் இருக்கிறது 
வாழப்போதுமான பதிலும் இருக்கிறது 
உன்னைப் போலவே ...

எங்கேயும் வழிகிற 
தெய்வதம் 
உன்னுள்ளும் வழிகிறது 
என்னுள்ளும் வழிகிறது 
நெகிழ்ந்து போன தருணத்தின் 
பரவச வார்த்தைகள் ....

எல்லாம் ஒன்று போல ....

ஆனாலும் உன்னை 
கண்கள் எப்போதும் நோக்கும் 
"விசித்திரமென"
"புரிய முடியா விசித்திரமென"  ...

(எழுத்தின் நோக்கம் புரிய தேவையான பின் குறிப்பு : எல்லோரும் ஒன்று போல என்கிற ஒருமை தத்துவத்தை உலகம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் எல்லோரும் பிரிந்து நிற்கிற முரண்.... )

Monday, March 15, 2010

நான்,..சின்ன சித்திரம்

எனக்காக எழுதுங்கள் ....

"மகிழ்ச்சியோடு என்றென்றும்" வாழ்ந்து முடிக்கும் கதைகளை

எனக்காக வரையுங்கள் ...

இடையழகும் , மார்பழகும் கொண்ட நவரச பதுமைகளை

எனக்காக செதுக்குங்கள் ...

இடை குறுகி, தோள் விரிந்த ஆணழகை ...

எனக்காக பாடுங்கள் ...

காதல் ததும்பும் பாடலொன்றை ..

எனக்காக செய்யுங்கள்

கலவி கொண்ட காதலினை

எனக்காக வாழ்ந்திடுங்கள்

குறைவில்லா வாழ்வதனை ....



முருங்கை வாழ்வு ..



இல்லாத இடையும், மார்பும்

கையெட்டாத ஆணும், அழகும்

சொட்டாத கலவி ரசமும்

கைவிட்ட வாழ்வே வாழ்வு .....

என் காலை வெட்டி நட்டுப்பார்த்தேன்

குழந்தை முளைக்கவில்லை.

மனதை வெட்டி மண்ணில் புதைத்தேன்

வாழ்வு முளைக்கிறது.


வளர்ச்சி குன்றிய மக்கள். இருபது வயதிலும் ஐந்து வயது உருவம்.
பிறப்பு உறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை. மூளை மட்டும் அதன் தன்மையில் வளர்கிறது. பக்குவம் அடைகிறது.

பக்குவம் அடைய சிரமம் கொண்ட உயிர்கள் இயலாத வேதனையில் துடித்து, வன்முறையில் இறங்குவதை காட்டுகிற படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. ("orphan") அத்தகைய ஒருவரை நேரில் பார்த்து அருகில் இருந்த வாய்ப்பு கிடைத்த போது ....அவரின் உணர்வுகள் ..என் கை வழியே பாய்ந்தோடி இதயம் தொட்ட போது ....வழிந்த உணர்வுகளை பதித்துள்ளேன்.

Thursday, March 11, 2010

எண்ணங்கள் இல்லா கவிதை

கவிதை எழுதென்று


கண்மண் தெரியாத ஆணை.

கேட்ட மொழியிலெல்லாம்

வார்த்தைகள் ஓடிவந்து

சப்பணம் போடுகிறது.

கேட்காத மொழியின்

சப்தங்களெல்லாம்

சரிக்கு சரி வந்து நிற்கிறது.

கண்ணிமை மட்டும்

கொட்ட கொட்ட

முழிக்கிறது ...

எண்ணங்கள் என்பதை

எங்கேயும் காணோமென்று !!!

அவள்.....

அவள்.....


சுழித்தோடும் மரகதம்.

தழுவிடும் மரப்பாலம்.

குளிர்ந்தது மர நெஞ்சம்.

விரகம் கொஞ்சம் மிஞ்சும்.



வெண்மணல் தொட்டாடும்,

புற்கீற்றை இழுத்தாடும்.

ஏங்கி நின்ற பாறைதனை

மோகத்தில் முழுக்காட்டும்...



கண்மலர பார்க்க விட்டு

இதழ் சுழித்து பாய்ந்தோடும்.

கண்மூடி வசமிழக்க

ஸ்ருங்கார பாட்டிசைக்கும்



ஏனோ..



மோதிவரும் காற்றோடு மட்டும்

நில்லாது சரசமிடும் !!

சாந்தினி

நானும் அவளும் ...

மறு கரையில்லா மழையாய் ..நான்


பெருங் கரையிட்ட குளமாய் ...அவள்

மோதிப் பிளக்கிற புயலாய் ..நான்

கை வீசி நடக்கிற காற்றாய் ...அவள்



கொதிக்கும் நெருப்புச்சிறகாய் ...நான்

வருடும் மயிலிறகாய் ...அவள்

இன்றே சாகும் துடிப்பில் ...நான்

என்றும் வாழும் விருப்பில் ...அவள்



சாந்தினி

வசந்தம் வருகிறது ....

வசந்தம் வரப்போகிறது இன்னும் சில வாரங்களில் ...
எப்போதும் பிடிக்கிற வசந்தம் ..
வாசத்துடன் வருகிற வசந்தம் ....
மழையை குடித்து சந்தோஷ பூ பூக்கும் மலை வெளிகள்..
எனக்குள் வாவென்று பல சிர கரங்கள் கொண்டு அழைக்கின்றன.
பாறைகள் படர்ந்து, கற்கள் உருண்டு கிடக்கும்
புல்வெளிகளால் அவை நிறைந்துள்ளன..
ஆங்காங்கு நிறுத்தி வைத்த பல கைகள் கொண்ட கம்பங்களாக
காக்டஸ் மரங்கள்....
ஒவ்வொரு மழைக்கும் வானம் நிறைய வாசம் நிரப்பும்
க்ரியோசொட் புதர்கள் ....
சிறு மழைக்கும் நெளிந்தோடும் சிற்றோடைகள் ...
பூக்களையும் அவ்வப்போது என்னையும் நெடுநேரம்
எதிர்கொள்ளும் ஹம்மிங் பறவைகள்....
மெலிதாய் சூடேறும் காற்று,
அதிகாலையில் குளித்த ஈரத்தின் சுவடுகளை
கழுத்தின் ஓரமாய் வருடிச்செல்லும் ...
ஆம் வசந்தம் வருகிறது .....என் வாசல் தேடிக்கொண்டு ...

Wednesday, March 10, 2010

இன்ன பிறவும்.....

இன்ன பிறவும்.....


என் தோழி ஒருவர் கேட்டார்...

அதையே கணவரும் வழி மொழிந்தார் ......

ஏன் உங்கள் கவிதைகள் சோகமாய் தொனிக்கின்றன என்று ...

தேடல் சோகம்தான்...

கிடைத்தவற்றில் களி மிகுமோ?

எழுதிதான் பார்ப்போமே......

குடம் நிறைந்ததா

நிறைக்குமா என்று .....