உனக்கு அனுப்பின என் கவிதை
குறித்து
நீ ஏதும் சொல்வாயென
சில சமயம் காத்திருந்ததுண்டு.
ஆனாலும் இப்போது தெரிகிறது
அபிமானத்தால் விளைந்த
உனது கருத்து தேவையில்லை என்பது.
அபிமானம் கொண்ட உன் கண்கள் மட்டுமின்றி
கவிதை படிக்கிற
எந்த கண்களும் கவிதையை
உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ
அளவிட முற்படுகிறது
(நன்றாயிருக்கிறது என்றோ அல்லது அப்படி இல்லை என்றோ )
.
எல்லாத் தருணங்களிலுமோ
அல்லது ஏதேனும் ஒரு தருணத்திலோ
உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஒரு தளத்தில்
சந்தித்து விடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றன.
அவை தமக்குள் சந்தித்து
வெறுமையை உண்டாக்குகிற
அதே நேரத்தில் ,
என் கவிதையின் சாரமும்
அதற்குள் தொலைந்து விடுவதை
மறுப்பதற்கில்லை.
ஆகவே, கவிதை பற்றின
உன் கருத்து குறித்து இப்போது மட்டுமல்ல ...
எப்போதுமே காத்திருக்கத் தேவையில்லை.